பாகம் 31, 32 & 33
பாகம் 31💗
எலி வீழ பொறி வைப்பர் யாமறிவோம். எலியன்று இவன் தேவ புலியென்ற புரிதலிலா புள்ளுவர்கள் உள்ளுவரே. கறையற்றோர் முறையோடு மறையோதும் மாந்தரையும் கரைசேர்க்க மரைமுகத்தான் வருவதனை மறைமுகமாய் அறிந்ததுமே கன்னியரை பொறியாக்கி கயவாளியர் வைப்பாரே.
குழலறுப்போர் குலம் கூடி கூர் பார்வை தனை எய்து கொற்றவன் வழி மறிந்து சுற்றியே வருவாரே. மாடுண்ணும் சூனியர்கள் மலிந்ததொரு மலைநாட்டில் சோறுண்ணும் சூத்திரர்கள் செய்வினைக்கஞ்சாத கைவினைப் பாவியர்கள் ஐயனிவன் மனையொட்டி உறைந்தவாறே மந்திரங்கள் முணுமுணுக்க தீத்திறத்தார் தீவளர்த்து கண்வழியும் காட்சியினை கண்டேனே நடுநிசியெல்லாம் .
இடுகாட்டில் பலர் நின்று யாகங்கள் புரிவதனை புரியார்க்கு புரியவைத்து இருளகற்றி அருள்பாய்ச்சும் இளம்பிறைத் தலையன் இவன் மெய்யுள் உறைந்ததனை பண்ணாக பாடுகிறேன். இவனை புண்ணாக்கும் எண்ணமுடன் புவிக்குள் புகுந்தோரும் மண்ணாவது திண்ணமென பொழிந்திட்டேன் பூதலத்தை பொதிந்தாளும் பரம்பொருளே.
கறைபடிந்த காப்பரெல்லாம் கலிகால குறியீடே. தரையாளும் தலைவன் கூட தன் வளத்தில் குறியாய் நின்றே மலையளவு பொருள் குவித்து மார்தட்டிக் கொள்வானே. தன்நலத்திற்காய் தரம் தவறி குடிகளையே கொல்வானே.
மறையோதும் வேதியர்கள் மனங் கெட்டு போவாரே. சிரச்சேதத்துக்கு உட்படாது கொடியோரினம் பெருகுவதால் சிறைக்குள்ளே மறையாத தீயோர்கள் தெருவிறங்கி வெட்டவெளி பகலினிலே வழிப்பறிதான் செய்வாரே.
கொடுங்கொலைகள் மலிவதனால் இறை மறுப்போர் பெருகிடுவர் உனை இழி மகனாய் வசைபாடி என்நாளும் மகிழ்ந்திடுவர். அது அவர் தவறாய் காண்கில்லேன். நின் அருளால் தான் அவர் வாழ்வர். நின் பாதம் பணிந்தோர்க்கும் இனி வீண்பழிகள் வந்திடுமே. பிறப்பகற்றும் பரம்பொருளே பேதைகளாய் புலம்புகின்ற சிறப்புடைய நல்லோர்க்கு நலம் சேர துயர் துடைப்பாய்.
பாகம் 32 💗
மண்ணழிய மன்னவரும் அழிய விண்ணதிர போர் மூண்டு கோடிகளில் மாந்தர் அழியக்கண்டேன். இல்லத்துள் மறைந்தொழுகும் மென்மயில் மெய்யணியை ஓருடை வேடுவர்கள் சூறையாடும் அவலங்கள் ஐயோ கண்டேன். பெண்ணழிக்கும் பிறன் கேட்டை உளத்தாலுமுள்ளா அறநெறியர் சிலரை அரிதாய் கண்டேன்.
அரக்கர் சூழிவ்வுலகில் இரக்கமுடை மாந்தர் தம்மை விரல் விட்டே எண்ணக்கண்டேன்.
வித்தையை இவனுக்களித்த விண்மீன் ஆளுநன் புலவனென்றறியக் கண்டேன். குருடனருள் கிடையா விடிலென்ன. கருடனார் தயவில் குருவருளுயர கண்டேனே பரம்பொருளே.
புற்றுக்கள் கோபுரமாமதில் புயங்கங்கள் புழங்க கண்டேன். நெற்றிக்கண் திறக்க வேண்டி நிறைஞானியர் அமரக்கண்டேன். மராளத்தை மாலையாய் தரித்த மலைமுடி மன்னவனை மனதில் நிறுத்தி மௌனமாய் இவனொளிரக் கண்டேன்.
வேதியருலகே போற்றும் விண் மதி பிறையணிந்த வியாளம் சூழ் கண்டமுடை சூலினி தலைவன் கண்டேன்.
நொந்தோர் ஊழனலில் வெந்தோர் மனம் வேண்டும் தந்தசூகம் தரித்த அங்கணன் கண்டமதில் கட்செவி விடமடக்கி கிடப்பதை கண்ணாரக் கண்டேன் விண்டேன்.
உரகங்கள் ஆரமாட உமை பாகன் ஆசியுடன் இவ்வையன் உலகாழும் காட்சி கண்டேன்.
பஞ்சணை பன்னகமாய் பாலாழியில் மிதந்திருக்க அதில் படுத்திடும் பரந்தாமன் இவனே அன்றி பாரினில் எவருமில்லை. பற்பல பரிதாபிகள் தன்னையே இவனென்று செப்பியே திரிந்ததெல்லாம் செப்படி வித்தையாய் சிதைவதை நன்றாய் கண்டேன். பலர் கண்கட்டு வித்தையெல்லாம் இவன் கண்ணசைக்க மாயக்கண்டேன் .
பாகம் 33💗
நீரினிற் விடம் வைத்தார் நிறை உணவினிற் விடம் வைத்தார். பசும் பாலினிற் விடம் வைத்து பழம் தனிற் விடம் வைத்த கொடும்பாதகரை என் சொல்வேன். பூமுகத்தான் தலைதொங்க பொல்லார் வன்முயற்சி வேதனைக்கு வித்திட்டு சாதனை முளைவிட்டு சரித்திர வளம் படைக்க சூத்திரம் வகுத்திடவே நீ பாத்திரம் செய் பரம்பொருளே ! மனமெல்லாம் விடம் வளர்த்த மாரகர் வார்த்த பல பேருறு வியூகங்களிலனைத்திலுமே தேறியே விடுபட்டு தெளிந்து வந்ததுதான் இழிமாந்தர் தனை திகைக்க வைத்தததுவே. பலர் தோல்வியில் துவண்டே தொலைந்ததை கண்டேனே. மும்மலமகற்றார் நிர்மல நெருப்புக்கு விடம் கொடுத்து அழித்திடத்தான் நினையலாமோ. இச்சூரியநாதன் தனைக் கூடியே கொல்ல ஓதிய வேதங்களும் சூழுரையாகியதை சொல்லாமல் சொல்ல வந்தேன். நில்லாமல் நீயே கேளு.. பாழ் மக்கள் பணிகளெலாம் வீணாகி போனதனை யாழிசைத்து கொண்டாடு. இம்மேன்மகன் காவலுக்கு பேராண்மகன் சிவனுண்டு அருகிலுமையாள் தினமுண்டு. ஆதாலால் தூக்கிவிட நினைந்தோரனைவருமே தோற்றதனால் துவண்டாரே. ஐம்பூதமரவணைப்பால் ஐயன் தினம்தினம் உயிர்த்தானே. சூரியன் மாண்டு விழ பில்லி சூனியம் வைத்ததுண்டோ.
ஊரஞ்சி நடுங்கினாலும் உரகவாளி தனஞ்சயனஞ்சி ஒடுங்குவானோ.
அறம் பிறளாது நின்றே ஐயன் பொருளற்று நிற்பானாம். ஆதலால் அகிலமும் பொருளற்று அடும்பஞ்சம் தலைவிரித்தாட இதை உடுக்கை பிடித்தோனும் உரக படுக்கை விரித்தோனும் பாராமுகம் கொண்டே இருந்தாலுமவர் பார்க்கும் முகம் ஒன்றே பாரினில் இவனாய் யாம் கண்டோம்.
Comments
Post a Comment