பாகம் 97, 98 & 99 பெருமான் உறங்கியே பெரும்பொழுதை கழிப்பான். பிற்காலம் ஐந்தும் பொருளின்றி தவிப்பான். அதன்பின் ஐந்தை வனங்களில் கழிப்பான். வாழ்வில் ஒரு நாளும் தலை குனிந்து வணங்கான். வானோர் வாழ்த்தி எம் வளநாடாள்வது ஐயிரண்டாய் அவனருளக் கண்டேன்.
பாகம் 97
🌸 ஆயிழை மேற் ஐயனவன் அலகிலா கருணையுடையான் . அவர் மேவும் அன்புக்களவிலா பெருமையுடையான் . அச்சேயிழையிற் சிற்சிலர் தம் வேல் விழி பாய்ச்சி வேளிவனை வீழ்த்தி வேண்டியே இசைந்து வசந்தமாய் வருகை தரும் பூவினை தன் பொற்கரம் தழுவி எம் பொன்மகன் புதுமணம் புரிய நெருங்கையில் பாதகர் குறுக்கிட்டு பகல் வேடனென பாவையர் மனம் சிதைத்து பேதையை அகற்றி பிறிதிடம் பதித்த வேதனையாற் வேந்தனவன் விழிகள் சுரந்ததை விதியென்றறிவேன் . பாமரனவனை பரிதவிக்க விட்டு பாராதிருந்ததேனோ பரம்பொருளே .
🌸 அம்பலத்துள் அவன் நுழையான் . ஆலயம் அவன் தொழான் . செம்புலத்து செழுநிலமாம் சீர்நெல்லை தென்திசை திரிகூட நாதனுக்கு குடதிசையில் வன்புயத்தான் வந்துறைந்து என்புருக்கி தவம் நோற்று ஈசன் மெய்யறிந்த ஆசான் கல்கி என்றே அகம் தெளிந்தோரவனொளி முகம் காண்பர் .
🌸 அவனியாளும் முன் ஐயன் ஆண்டியாவான். அவன் பின் அரசுகள் ஆண்டியாகி அகிலமே ஆண்டியாகும். மையத்து நிதிகளெல்லாம் மனம் வெம்பும் மன்னுயிர்க்கு நலம் தராது தரணியாளும் தான்தோன்றி உறவுக்கே பயன் தர வையத்துள் வறுமை வாழ்வாங்கு வாழும். மெய்பொருள் எழுதிய மீறா விதியிதை மேதினியர் எழுதவில்லை. வெய்யரை சபித்து அந்த விண்டுலகில் எழுதியாய் கண்டு கொண்டேன் பரம்பொருளே
🌸போர் தின்று புல்முளைக்கா பொட்டல் மேனியுடன் பூமகள் போர்வையிலா அம்மணமாய் புலம்புவதை யானன்று கண்டேன். ஏர் நின்று இயல் உணவு எழும்பா எரி வயல் ஊணின்றி உருகியதை உள்க்கண்ணூன்றி உயிருறைய உற்று யானன்று கண்டேன். பார் முழுக்க பசி உண்டு பலியாகும் பல்லாயிரம் கால பைம்பயிர் பாழாய் விழுவதை என் மேல் விழியால் மெய்யற கண்டேன். ஊருண்டு உறையும் மாந்தர் இல்லா வேரற்ற மரமாய் வீணாய் விறகுக்கும் உதவாது வீழாது வாழ்வதனை யான் கண்டு நொந்தேன் எம்முயிருறை பரம்பொருளே.
🌸மாடு உண்ணும் மாநிலத்தார் மரணம் உண்ணா மன்னவனை காடு சென்றும் பின் தொடரும் கருணையில்லா வினை ஏற்று காலன் கௌவும் காலம் வரை களைப்படையா கருமம் செய்வர். காரிரும்புள் கனகம் அரும்ப அதன் கரு எண்ணில் மாற்றம் செய்யும் மேன்கலையை கற்றுதந்து மேதைமுனி வரமருளும் கண்கொள்ளா காட்சியினை கண்டதனை ஊனுருக யானுரைதேன். இவ்வுண்மையினை உலகறிய ஓரிரு ஆண்டெடுக்கும் உத்தமரே அறிந்திடுக.
🌸கண்டம் நெரித்து கணக்கு தீர்க்கும் கருணையிலா வஞ்சகனொருவன் வீட்டிற்குள் வீற்றிருக்க வேந்தன் வடிவில் வேடுவனொருவன் மண்டையில் மகுடமேறி மடையனாய் விதி சமைக்க கொட்டம் அடங்காமல் குதூகலிக்கும் மண்டுகள் பல் கோடி மண்டூகக் திரை ஏந்தி மனம் களிக்க மண்ணீதி மாசுறைந்து மன்னுயிர் மனம் கொதிக்க பின்னரனைவரும் பேய்காற்றில் அணையும் விளக்குகெனவே ஆர்ப்பரித்து ஆடுவதை அருள்வாக்காய் அவன் சொல்ல அதையே உள்வாங்கி அடியேன் யான் சொன்னேன்.
🌸 அன்று ஞானியர் முன்னடந்து நன்மக்கள் பின் தொடர சீறிய கடல் தணிந்து சீரிய தடம் பதிக்க மேவிய அலை பிளக்க காவிய இனம் தழைத்து கடல் கண்டம் தனில் வாழும். அத்துடன் தன் கறை கரம் இணைக்கும் ஐயன் காவிய நாடாளும் ஆளுநன் முடிவெடுத்து அவலம் பெறும் நிலை கண்டேன். பனியுறை பரந்த பாராண்டு பல்லுதவி செய்த வல்லாளன் வேண்ட உறவறுக்க தயங்கா உயர் பரத மண்ணாளும் பகல் வேட நட்பிலோர் பாழ் மன்னன் மீற குருதி வண்ண நிழல் வீழும் கோர கடற்கு குடக்கமைந்த கொற்றவ தேசத்துடன் தகுதியில்லா கரம்பிணைத்து தருமம் தனை இழப்பதுடன் தரைகளும் தகர்ந்த வண்ணம் தழல் வீழ்ந்து கருகக் கண்டேன்.
🌸 அன்பகமே என்னுரைக்கு அகலாது செவிசாய்ப்பாய் . வம்பு தனை விலைக்கு வாங்கி வாழ்க்கைக்கு உலை வைக்கும் நெம்புகோல் அறிவியல் நெறி பிறழ்ந்து வளமழித்து உறை கிணற்றுக் குழல் கருவி உள்ளாழ்ந்து ஊடுருவி நிலமகளின் மடிமுழுதும் நிறைந்திருக்கும் கருந்தேனை புறமுறிஞ்சி பொற்றேனாய் பிழிந்தெடுத்து புறவெளி புகை கக்கி பொல்லாது சீரழிய நிலத்துள்ளே வெளி விழுந்து நிலமடந்தை நடு நடுங்க நிலையாது கிடு கிடுங்க புதைந்திடும் பன்னிலமே . பின் போர்காலம் பூப்பெய்தி பொல்லா விளைவு தந்து முற்று பெற்று அற்ற அவனியிலே அருள்வீசும் உற்ற செவ்வேளாய் ஒருவனெழுவானே . பாரேந்தும் விளக்காக பரந்தாமன் இலக்காக பைந்தமிழன் ஒளிர்வானே . ஏரேந்திய இனம் நடுவே ஏறெனவே மிளிர்வானே .
🌸 செம்புணரி சீர்குலைந்த சேதியை உலகறியும். கம்புறை காரிருள் கடல் சூழ் கண்டமே உருக்குலையும். செம்மாந்தர் சேனைகளால் கண்டமுறை கயவரினம் கண் சிவக்க பிண்டமாகி போர்களத்தில் பெருவாரி மண் சிவக்கும். பொன்மகளின் பூங்கண் மலர்ந்த வானுயர் வன்நாடே வாக்கு நீங்கி வரம்பிலா வசை தாங்கி பெரும்பாடடைந்திடுமே. பேதைகளும் திருந்தாது வாழ்விழக்கும் வரம் வாங்கி வாதைக்கு வழிவிட்டு அதன் வாய்க்கிரையாகி வானுறைய வழியின்றி தீவினைக்கடிமையென தெரிந்து கொண்டேன் பரம்பொருளே.
மூச்சுக்கு விடமூட்டி மூன்று தலைமுறைக்கும் முடிவு கட்டி நாக்கினை வெளித்தள்ளும் நச்சுணவை நல்லுயிர் பைக்குள் இட்டுவிடும் இரக்கமிலா போர்களமாய் ஈனர்கள் அமைத்ததனை ஈசன் காட்சிக்குள் கண்பதித்து கனத்த என்னிதயம் தனை கரைத்தேனே.
🌸 கொண்டலைத் தீண்டி குளிர் தென்றலை மோந்தி வாடையை வருடி மெல்லிய கச்சான் மேனியை தழுவி வென்றிடும் உயிரி மந்தையுள் நுழைய மனிதரில் விளைய மாசுறு வல்லார் மனம் கெட்டு விதைக்க கொல்லுயிர் தன்னின் கொடு இனம் நோக்கின் நம் கூரிய கண்ணோ குருடாகிப்போக நுண்ணிய விழியே நுட்பமாய் காணும் ஊமத்தங் காயொத்த உருவம் எடுத்து பல்லுடல் நீவி பாரெங்கும் தாவி மாந்தரை வதைத்து மனந்தனை சிதைத்து மௌனமாய் சிதையில் ஏற்றிடும் பொருட்டு கூற்றுவன் எறியும் கொலைவெறிக் கயிற்றை ஏற்றிடாதறுத்திடும் இயற்கை ஒளடத இளந்தளிர் மகத்துவமுறைந்த குடமுனி மாமலை மடிதனில் தவழ்வது ஐயன்தானென அறம்பாடி இங்கிவன் அடிகளில் வைத்ததை ஆதரித்தருள்புரி அகிலாண்ட நாயகி .
பாகம் 98
🌸 கற்பகமாய் காந்திமதி நெல்லையப்பர் கால்பதித்து காத்தருளும் திருபொருநை நதியமுதை தீர்த்தமாய் அவன் சுவைத்தான் அகவை மூன்றினிலே ஆருயிரே அறியாயோ. அங்கவன் அன்னையே இடம் பெயர்ந்து அப்பனையும் பிரிந்து ஐம்பூதத்திலோர் அனல் பூதத்தடிபணிந்து ஐயனை வளர்த்ததும் அந்நதிக்கரையூராம் அழுக்கற அணிதுகில் வெளுப்பான் பேட்டையென்று தோன்றியதை அவன் தோன்றும் முன்னம் சொல்லவந்தேன். தூண்டிலில் வீழாத திருத்தொண்டன் மீண்டு வர தூது சென்று தூண்டிடுவாய் தூய்மையான அவ்வுயிர்க்கு வேண்டியதை நீ நல்கி வேதை நீக்கு பரம்பொருளே.
🌸 பெருமான் உறங்கியே பெரும்பொழுதை கழிப்பான். பிற்காலம் ஐந்தும் பொருளின்றி தவிப்பான். அதன்பின் ஐந்தை வனங்களில் கழிப்பான். வாழ்வில் ஒரு நாளும் தலை குனிந்து வணங்கான். வானோர் வாழ்த்தி எம் வளநாடாள்வது ஐயிரண்டாய் அவனருளக் கண்டேன்.
வேந்தனிவன் வேர்விட்டெழும் வேளையில் வெண்தலைக்குள்ளே வேரிடும் வன்மம் வையம் இரண்டாய் வகுபட இயக்கும். செங்கொடிகளோடு கருங்கொடிகள் மோதும். அங்கு சிதறிய உடுமீன் ஐம்பதின் நிலமே சிதையும் முழக்கம் மையத்தை தாக்கும் வலியை என்னால் தாங்காது துடித்தேன்.
என்னாட்டையும் ஏற்காது ஈர விழிகலங்கி பொன் மகள் அகலும் பொல்லாத நாளில் பன்னகம் தன்னில் பள்ளி கொள் பன்முகனவனே பரிதியாய் வெடிக்கும் போது பங்கமாகி பாழ்பட்டு குலைந்த நிலமகள் உயிர்த்து நெஞ்சுரம் பெற்று நல்வரமேற்று நலம் கொளும் நாளை நாதனறிந்ததால் நானும் அறிந்தேன்.
🌸 ஐயன் அகன்ற இடம் அல்லல் பட்டழும். அவன் புறம் நகர்ந்து புக்கும் நிலம் பொன் விளையும் பூமெட்டாயெழும். அவனுறை திருத்தலம் சீற்றம் காணா செழுநிலமாய் நகும். அவன் பாதமுறையா பாழ் நிலத்தை பங்கம் செய்ய வாதையோடு வரும் புயலும் வருத்தி பேயென சீறி பீதியை தருமே. அவன் துறவியாய் அகன்று துயருறும் போது இன்னலைத் தவிர இன்னிலம் தன்னில் இன்னொன்று ஏது. அவன் நிலைக்குமிடத்தில் எல்லாம் நிலைக்க இல்லற மாந்தர் இனிதாய் களிக்க என் விழிகளியிரண்டே ஈடிலா சாட்சி என்பதைத் தவிர ஏதுமில்லை எல்லாமறிந்த எம்பெருமானே.
🌸 முத்தமிழ் காக்க வரும் முப்பாட்டன் அவனே தான். முறை மாமன் மாயோனாய் முன் உதித்த சேயோன் தான். மொத்தமாய் சித்தர் சூழும் மூதறிவு பெட்டகமாய் உற்றதொரு பெற்றாள் போல் உயிர்துடிக்க கண்டேனே. புற்றீசல் சிற்றினங்கள் போரடித்த தென்னாட்டின் பக்தனாகி தெளியா பித்தனாகி நெறி பிறழா நீதியொடு நீணிலம் காப்பானே. பேராண்மை நீங்கா பின்புலமாய் எம் போல் பலரிருந்து
ஈடிலா அறம் காப்போம். பிறப்பெல்லாம் தமிழ் வளர்க்க பேரிறையே துணையிருப்பாய்.
பாகம் 99
🌸 கல்மனமுடை கறை குணமாம் கடை குணம் எம் கண்மணிக்குள் காணேன் காக்கும் கணநாதா. முக்குணத்தின் முதல் குணமாம் பொற்குணமுடை பூமனத்தான் நற்குணத்தை நன்கறிவேன். அதனிடை பிற்குணமே பெருமகனிவனை பெரிதாய் இயக்கி பெருங்கோபமுற்று தெக்கண தீயரை தீதற அழிக்கும் நற்குணத்தானாகி நனிதே நாதனொளிர் முக்கோணத்தென் முனை முல்லைநில மூலாதார குமரி குண்டலியில் எழுந்து பங்கய இதழ்கள் பதிற்று நூறென பாரினில் விரித்து அனைத்து இனங்களுள் அன்பிலுறைவதை அன்று கண்டேனதை இங்கு தந்தேன்.
🌸 உளம் நடுங்க கதிர்கக்கி உலகாண்ட நகரே உருக்குலைந்தழியும். உருண்டை கோளத்தின் உச்சி வகுந்தெடுத்த நிமிர்ந்த நெடு ரேகை நேர சுழியத்தை கால கணிதத்தால் கற்பனையில் பிளக்கும். படுமரமாய் பார்க்கையிலே அப்பாழ்நரகை பாகையிற் ஐந்தடுத்து ஒன்றரையாய் அறம்பாடி அறிவேன். ஆங்கே கொடும் பாவிப்பேய்களெலாம் கூத்தாடி கொண்டாடி உலவும். சிவனார் புவியோ நம் செவ்வேள் தயவால் சிரம் தூக்கி உலகெழுந்து வயிறாற பெருஞ்சோறு படைக்கும். மீண்டுமொரு மிகை நாளில் மேற்கமைந்து மேதினியை இயக்கும் மதனார் மையலொடு மணம் மாற்றி மணாளனை வெளியேற்றும் மனை மோக மாநாடு மண்ணோடு புதையும். அத்தோடு அவனியெங்கும் அறம் ஓங்கி அருள் வீச பூக்குமிதை அறம்பாடி இங்கிருந்தே சென்றறியாது இன்றறிவேன்.
🌸 பாயும் பல்வரியின் பட்டு வாலை பார்வை கொண்டும் ஓநாய் வேந்தர்களே ஓசையின்றி பற்றிவிட ஓயா போர் வெடித்து உலகழிய அமைந்திடுமே. மாளும் கிலி பிடித்தே மண் பரப்பே நடுங்கிடுமே. தீயின் தழலெனவே திணறடிக்கும் கேள்விகளால் நாளும் சபை முடங்கும். நாடா பகை வளர்ந்து நாளுக்கு நாள் மிகுந்து மீளா பன்னகரும் மீட்பனின்றி எரிந்திடுமே. அருமணியே இணையிலியே அறநெறியர் அன்பகம் தான் நொந்து சிதையாமல் நீ நொடிப்பொழுதும் அகலாமல் வந்து காவல் செய்வாய் என் வாக்குக்கு செவிசாய்த்து வாழ மனமிரங்காய்.
🌸 உடுமீன் உச்சமுடை உறுமீன் முதல்வனாய் கலைக்களம் கண்டோன் வலக்கரமொன்று செம்மீன் பிடித்து சேமித்த பணத்தில் கொலைக்களமமைத்து குருதி குடிக்கும் குமரிக்கடல் கயல் வேடனொருவன் கருணை கெட்டு கயமையிலுதித்ததை கண்ணீர் ததும்ப யானே கண்டேன். வையத்து மெய்யர்
வகையறியா வன்மைக் கரமது வாளொடு உறைந்து வான் மகன் தலைக்கு வன்தொகை பெற்றும் தேறாது வீழ்ந்து தீக்கிரையாவான்.
🌸 உடனலர்ந்த உயிர் கொடியுறை இளமலர்கள் உய்ய வழி செய்யா ஐயன் வாழ்வு அல்லல்பட்டு நெகிழ்ந்து அழுமே. கடன்பட்டு கருகி வீழா கண்ணியம் இவனுடன் காலமெலாம் வருமே. அகம் கெட்டு திரிந்த தாடகையாள் தன் தமையன் தருமனாய் தெரிந்தும் தரங்கெட்டோருடன் உடன் பட்டு உறவாடி கெடுப்பதை உரித்தான கலையாய் வகுத்தாள் என்பதை வானோர் முன் யானறிவேன் வழி காட்டும் பரம்பொருளே.
🌸 திக்கெங்கும் வழி பிரிய தீது இழுக்கா நேர்வழியை தேர்ந்தெடுத்தான் தேவதேவன். வான் நடத்தி வழிகாட்டி வாடிய அவன் முகம் கண்டே வாடிநின்றேன். நீ வாளாதிருப்பானேன் வாழ்வளிக்கும் பரம்பொருளே ? தக்காரனைவற்கும் தன்னிறைவை தருகின்ற முத்தழிழ் மணம் வீசும் முக்கண்ணன் வடிவாய் தெக்கணத்தில் ஒளிர்கின்ற தீரன் முகமது கண்டு திகைத்து வந்தேன் மலைத்து நின்றேன். ஐயனொரு ஆலயமாய் அடியேனே வணங்கி நின்று அடியொற்றிப் பாடுகின்றேன். நலம் நாடும் நன் நட்பும் அவனுக்கில்லை. நஞ்சுறை நெஞ்சர்கள் நடும் தொல்லை தனை தாங்கி நன்னெறியை நெஞ்சகத்தே நாளும் நாளும் நட்டதனால் நாதன் நாடும் அகம் ஆனான். நானும் அவனுடன் ஆனேன். வேடர் அவன் வீடு சுற்றி விளைத்திருந்தபோதிலுமே வினை விதைத்த அறுவடையை வீறுடனே அறம் பார்க்கும். இனி வீண் கவலை எமக்கில்லை. விடியல் வேளை வேல் சூழ வீரைய்யன் படையாள வெகு விரைவில் யுகம் மாறி எல்லாமும் நலமாகும். நாதன் அவன் நலம் ஒன்றை நல்லறமே நாடுவதாய் நானறிவேன் பரம்பொருளே.
Comments
Post a Comment